Archives: மார்ச் 2024

இன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தார்!

சார்லஸ் சிமியோன் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பல்கலைக்கழகத்தில் சேரும் முன், அவருக்கு குதிரைகளும் ஆடைகளும் பிடிக்கும், ஆண்டுதோறும் தனது ஆடைகளுக்காக பெரிய தொகையை செலவிட்டார். ஆனால் அவரது கல்லூரியின் ஒழுங்கின்படி திருவிருந்து ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அவர் நம்புவதை ஆராயத் தொடங்கினார். இயேசுவின் விசுவாசிகளால் எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்த பிறகு, அவர் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஒரு வியத்தகு மாற்றத்தை அனுபவித்தார். ஏப்ரல் 4, 1779 அன்று அதிகாலையில் எழுந்த அவர், “இயேசு கிறிஸ்து இன்று உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா! அல்லேலூயா!” என கதறினார். அவர் ஆண்டவரைப் பற்றிய விசுவாசத்தில் வளர்ந்ததால், அவர் வேதாகம வாசிப்பு, ஜெபம் மற்றும் சபை ஆராதனைகளில் கலந்துகொள்வதில் தன்னை அர்ப்பணித்தார்.

முதல் ஈஸ்டர் அன்று, இயேசுவின் கல்லறைக்கு வந்த இரண்டு பெண்களின் வாழ்க்கை மாறியது. அங்கே ஒரு தூதன் கல்லைத் புரட்டி போட்டதால் பூமி மிகவும் அதிர்ந்ததை கண்டனர். அவன் அவர்களிடம், "நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்" (மத்தேயு 28:5–6) என்றான். மிகுந்த மகிழ்ச்சியில், ஸ்திரீகள் இயேசுவை பணிந்துகொண்டு, தங்கள் நண்பர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல ஓடினர்.

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சந்திப்பது பண்டைய நாட்களில் மட்டும் நடப்பதல்ல; அவர் இங்கேயும் இப்போதும் நம்மை சந்திப்பதாக வாக்களிக்கிறார். கல்லறையில் பெண்கள் அல்லது சார்லஸ் சிமியோன் பெற்றது போன்ற ஒரு வியத்தகு சந்திப்பை நாம் அனுபவிக்கலாம், இல்லமல் போகலாம். இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவது எத்தகைய விதமாயினும், அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் நம்பலாம்.

கிறிஸ்துவின் பேரன்பு

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

படப்பிடிப்பின் போது, ​​கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார்.

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன.

ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது.

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கடைசியில் ஒன்றுசேர்க்கப்படுதல்

1960 ஆம் ஆண்டில், ஓட்டோ ப்ரீமிங்கர் தனது “எக்ஸோடஸ்” திரைப்படத்தின் மூலம் சர்ச்சையைத் தூண்டினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்ந்த யூத அகதிகளின் கற்பனைக் கதையை இந்தத் திரைப்படம் தெரிவிக்கிறது. கொலை செய்யப்பட்ட ஒரு இளம் யூதப் பெண் மற்றும் ஒரு அரேபிய மனிதனின் உடல்கள் விரைவில் இஸ்ரவேல் தேசமாக இருக்கும் நாட்டின் அதே கல்லறையில் புதைக்கப்படுவதுடன் படம் முடிவடைகிறது.

பிரேமிங்கர் முடிவை நம்மிடத்தில் விட்டுவிடுகிறார். இது விரக்தியின் உருவகமா, என்றென்றும் புதைக்கப்பட்ட கனவா? அல்லது வெறுப்பும் குரோதமும் கொண்ட வரலாற்றைக் கொண்ட இரண்டு மக்கள் - இறப்பிலும் வாழ்விலும் ஒன்று சேர்வதால் அது நம்பிக்கையின் அடையாளமா?

ஒருவேளை சங்கீதம் 87-ஐ எழுதியதாகக் கருதப்படும் கோராகின் புத்திரர்கள் இந்தக் காட்சியின் பிந்தைய பார்வையை எடுத்திருக்கலாம். நாங்கள் இன்னும் காத்திருக்கும் ஒரு அமைதியை அவர்கள் எதிர்பார்த்தனர். எருசலேமைப் பற்றி, “தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும்” (வச. 3) என்று சொல்லுகிறது. யூத மக்களுக்கு எதிராகப் போரிட்ட வரலாற்றைக் கொண்ட தேசங்கள் ஒரே உண்மையான கடவுளை ஒப்புக்கொள்ள ஒன்றுசேரும் ஒரு நாளைப் பற்றி அவர்கள் பாடினர்: ராகாப் (எகிப்து), பாபிலோன், பெலிஸ்தியர்கள், தீரு, எத்தியோப்பியர்கள் (வச. 4). அனைவரும் எருசலேமிடமும், அதின் தேவனிடத்திற்கும் இழுக்கப்படுவார்கள்.

சங்கீதத்தின் முடிவு கொண்டாட்டமானது. எருசலேமில் உள்ள மக்கள், “எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது” (வச. 7) என்று பாடுவார்கள். அவர்கள் யாரைப் பாடுகிறார்கள்? ஜீவத் தண்ணீராக இருப்பவர், எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக இருக்கிறார் (யோவான் 4:14). நிலையான சமாதானத்தையும் ஒற்றுமையையும் கொண்டுவரக்கூடியவர் இயேசு ஒருவரே.

விசுவாசத்தில் அடியெடுத்து வைத்தல்

சிறப்புப் பேச்சாளர் தேவனை நம்பி “நதியில் அடியெடுத்து வைப்பதன்” ஞானத்தைப் பற்றி பேசினார். தேவனை நம்பிய ஒரு போதகரைப் பற்றி அவர் கூறினார். அவருடைய நாட்டில் புதிய சட்டம் இருந்தபோதிலும் ஒரு பிரசங்கத்தில் வேதாகமத்தின் உண்மைகளைப் பேசத் தேர்ந்தெடுத்தார். அவர் அந்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு முப்பது நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவரது வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் வேதாகமத்தைக் குறித்த தனிப்பட்ட விளக்கத்தை அளிக்கவும் மற்றவர்களைப் பின்பற்றும்படி வலியுறுத்தவும் அவருக்கு உரிமை இருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கும் ஆசாரியர்களும் ஒரு தேர்வு செய்ய வேண்டியிருந்தது —தண்ணீரில் இறங்குவது அல்லது கரையில் தங்குவது. எகிப்திலிருந்து தப்பித்த இஸ்ரவேலர்கள் நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தனர். இப்போது அவர்கள் யோர்தான் நதியின்; கரையில் நின்றார்கள். அது வெள்ளப்பெருக்கெடுக்கும் ஆபத்தான நிலையில் இருந்தது. ஆனால் அவர்கள் துணிந்து இறங்கினர். தேவன் தண்ணீரை குறையச் செய்தார்: “ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று..” (யோசுவா 3:15-16). 

நாம் நம் வாழ்வில் தேவனை நம்பும்போது, வேதாகமத்தின் உண்மைகளைப் பேசுவதைத் தேர்ந்தெடுத்தாலும் அல்லது தெரியாத பிரதேசத்தில் ஒரு அடி எடுத்து வைப்பதைத் தேர்ந்தெடுத்தாலும், முன்னேறுவதற்கு ஆண்டவா் நமக்கு தைரியத்தைத் தருகிறார். போதகரின் விசாரணையின் போது, நீதிமன்றம் அவரது பிரசங்கத்தைக் கேட்பதன் மூலம் நற்செய்தியைக் கேட்டது. மேலும், யோசுவா புத்தகத்தில் இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் பாதுகாப்பாகக் கடந்து, வருங்கால சந்ததியினருடன் தேவனுடைய வல்லமையைக் குறித்து பகிர்ந்து கொண்டனர் (வச. 17; 4:24).

விசுவாசத்தில் நாம் துணிந்து அடியெடுத்து வைத்தால், தேவன் மற்றதைப் பார்த்துக்கொள்வார்.

கிறிஸ்துவுக்குள் உண்மையை பேசுதல்

ஒரு நபர் தனது தனிப்பட்ட போக்குவரத்து டிக்கெட்டுகளை பொய் சொல்லி பெறுதில் வல்லவர். அவர் நீதிமன்றத்தில் பல்வேறு நீதிபதிகள் முன் ஆஜரானபோது, “நான் என் சிநேகிதியுடன் சண்டையிட்டேன், அவள் எனக்குத் தெரியாமல் என் காரை எடுத்துச் சென்றுவிட்டாள்" என்று கதை சொல்லுவார். மேலும், பணியில் இருந்தபோது தவறான நடத்தைக்காக அவர் பலமுறை கண்டிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர்கள் இறுதியாக அவர் மீது நான்கு பொய்ச் சாட்சியங்கள் மற்றும் ஐந்து மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இந்த மனிதருக்கு, பொய் சொல்வது வாழ்நாள் பழக்கமாகிவிட்டது.

இதற்கு நேர்மாறாக, உண்மையைச் சொல்வது கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கியமான பழக்கம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். எபேசியர்களுக்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்படைப்பதன் மூலம் பழைய வாழ்க்கை முறையை விட்டுவிடுவார்கள் என்று அவர் நினைப்பூட்டினார் (எபேசியர் 2:1-5). இப்போது, அவர்கள் புதிய நபர்களைப் போல வாழ வேண்டும், அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிட்ட செயல்களை இணைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் “பொய்யைக் களைந்து,” “அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்” (4:25) என்று ஆலோசனைக் கொடுக்கப்படுகிறது. அது திருச்சபையின் ஒற்றுமையைப் பாதுகாக்கும், எபேசியர்கள் எப்போதும் தங்கள் வார்த்தைகள் செயல்கள் மூலம் "மற்றவர்களைக் கட்டியெழுப்புவதாக" இருக்க வேண்டும் (வச. 29).

பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவது போல (வச. 3-4), இயேசுவின் விசுவாசிகள் தங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் சத்தியத்திற்காக பிரயாசப்படுவோம். அப்போது திருச்சபை ஒன்றுபடும், தேவன் மகிமைப்படுத்தப்படுவார்.